ஆவின் நிறுவனத்தின் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதனால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த முறை வழக்கு விசாரணையின் போது ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கைது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட்டு, முன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.