சென்னை: ஆசிரியர்களுக்கான எச்சரிக்கை ஒன்றினை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது… ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் குறித்து அந்த கடிதத்தில் சில முக்கிய விஷயங்கள் தெரிவித்துள்ளன.
அக்கடிதத்தில், “2024-25ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கு அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விண்ணப்பம்: இந்த கல்வியாண்டில் (2024-25) ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
பள்ளித்தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை வழங்கிய பின்னர், அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
விருப்ப மாறுதல்: விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு, நிர்வாக மாறுதல், அலகு மாறுதல், பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதற்கு உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திட வேண்டும். மாறுதல் கேட்கும் விண்ணப்பங்களை 13.5.2024 முதல் 17.5.2024 அன்று மாலை 6 மணி வரை EMISIL இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.
மேலும் காலிப்பணியிட விவரங்கள் emis இணையத்தில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்ட பின் சேர்க்கை, நீக்கம், திருத்தங்கள் போன்றவற்றுக்கு இடமளிக்காமல் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. பணிநிரவல் (பணிநிறுத்தம்) கலந்தாய்வுக்கு மட்டும் காண்பிக்கப்படும் கூடுதல் தேவையுள்ள (பதிவு தேவை) காலிப்பணியிடங்களையும் மேற்படி இணையத்திலேயே அதற்கென உள்ள உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
அறிவுரைகள்: பொதுவான அறிவுரைகள் கணவன், மனைவி (மனைவி முன்னுரிமை) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பணிபுரியும் அலுவலகம், பள்ளி அரசு மற்றும் அரசுத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கணவன், மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கி.மீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்பட வேண்டும். மனமொத்த மாறுதல்கள் (பரஸ்பர பரிமாற்றம்) மற்றும் அலகுவிட்டு அலகு மாறுதல் , துறை மாறுதல்கள் (அலகு பரிமாற்றம்) சார்பான விண்ணப்பங்கள், பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள்: மாறுதலுக்கும் விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் உள்மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள, மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகை புரியாமலோ, தாமதமாக வருகை புரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்பட்டால் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கலந்தாய்வு: உபரி எனக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களில் 40% மாற்றுத்திறனாளி, 40% கண் பார்வையற்றவர் மற்றும் NCC பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் பணி நிரவல் கலந்தாய்வில் விலக்களிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அடுத்த இளையவரை அதே பாடத்தில் பணி நிரவலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.