2 மணி நேரத்தில் பரவுது ஒமைக்ரான்; அனைவரையும் பரிசோதிக்க அனுமதி வேண்டும்
-‘ஒமைக்ரான் வைரஸ் இரண்டு மணி நேரத்தில் பரவக்கூடியது என்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணியருக்கும், கட்டாய பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என, மத்திய அரசுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கடிதம் எழுதிஉள்ளார்.கடித விபரம்:வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில், 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது; 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் மட்டுமே, மத்திய அரசு வகுத்துள்ள ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள். மற்ற 24 பேர் குறைந்த பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, 48 மணி நேரத்தில் ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து வைரஸ், இரண்டு மணி நேரத்திற்குள் மற்றவர்களுக்கு பரவுவதால், பேரிடர் சூழலை உருவாக்கக் கூடும்.
தற்போது வரை ஒமைக்ரான் அதிகம் பாதிப்புள்ள பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு, தீவிர கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை; 2 சதவீதம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்வதால், ஒமைக்ரான் பரவலை தடுக்க முடியாது.அதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணியரையும், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும்.பரிசோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு வந்தால் மட்டுமே, விமான நிலையத்தில் இருந்து வெளியே அனுமதிக்க வேண்டும்.ஒரு விமானத்தில் இருந்து, மற்றொரு விமானத்துக்கு மாறுவதாக இருந்தாலும், தொற்று இல்லை என முடிவு வந்தபின்அனுமதிக்க வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று இல்லை என்றாலும், ஏழு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்; எட்டாவது நாளில் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.அதில் தொற்று உறுதி யானால், ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி சிகிச்சை வழங்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.