சென்னை : . தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை.
இதனால், மத்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மே மாதம் துவங்கிய காற்றாலை சீசன், வரும் செப்டம்பரில் முடிகிறது. இந்த சீசனில் காற்றாலைகளில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு மின்சாரம் கிடைத்தது.
இதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய, அந்த மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், செப்., 20 முதல் நவ., 15 வரையிலான காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய, ‘ரவுண்ட் தி கிளாக்’ எனப்படும், 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில், 1,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின் வாரியம் தற்போது டெண்டர் கோரியுள்ளது.
இது தவிர, 2023ல் கோடை கால மின் தேவையை சமாளிக்க, பிப்., 15 முதல் மே 20 வரை, 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில், 2,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை சீசன் அக்டோரில் துவங்குகிறது. அப்போது, மின் தேவை வழக்கத்தை விட குறையும். எனவே, செப்., முதல் நவ., வரை மின்சாரம் கொள்முதல் செய்ய, மின் வாரியம் டெண்டர் கோரியிருப்பது அவசியம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.