சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர்.
மும்முனை மின்சாரம்
சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் இருந்து சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள பாலதொழுவு, பனியம்பள்ளி, ஓட்டப்பாறை மற்றும் புதுப்பாளையம் ஆகிய 4 ஊராட்சி பகுதிகளுக்கு குழாய்கள் அமைத்து மின் மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும் தற்போது முகாசிபிடாரியூர் ஊராட்சி பகுதிக்கும் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தங்கு, தடையின்றி தொடர்ந்து 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்று அன்று முதல் இதுவரை சென்னிமலை அருகே பெரியாண்டிபாளையத்தில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து புதுப்பாளையம், அய்யம்பாளையம், திப்பம்பாளையம், வெங்கமேடு, ஓலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
முற்றுகையிட திரண்டனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் 12 மணி நேர மும்முனை மின்சாரம் மட்டும் வழங்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை 9 மணி அளவில் சென்னிமலை – ஊத்துக்குளி ரோட்டில் தொட்டம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை மின்வாரிய அலுவலகத்தில் இருந்த உயர் அதிகாரிகள் விவசாயிகளை செல்போனில் தொடர்பு கொண்டு, இது குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பெருந்துறை வருமாறு அழைத்தனர்.
உறுதி
அதைத்தொடர்ந்து எக்கட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் சி.தங்கவேல் தலைமையில் விவசாயிகள் பெருந்துறை சென்றனர். அங்கு விவசாயிகளிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை தொடர்பு கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ‘குடிநீர் தேவைக்காக இதுவரை 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை வழங்கியது போல் தொடர்ந்து இனிமேலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று கொண்ட மின்வாரிய அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அங்கிருந்து சென்றனர்.