ஈரோடு டு அமெரிக்கா: ₹3 கோடி ஸ்காலர்ஷிப்பை வென்ற பள்ளி மாணவி!

“பணம் இருக்கவங்கதான் அந்த மாதிரியான அமெரிக்க யுனிவர்சிட்டியில எல்லாம் போய் படிக்க முடியும். உன் ஃபேமிலியோட வசதிக்கு எல்லாம் அது சாத்தியமே இல்லை’ன்னு எனக்குத் தெரிஞ்சவங்க சொன்னப்ப எனக்குக் கஷ்டமா இருந்துச்சு.”

“எங்க அம்மாவும் அப்பாவும் பெருசா படிக்காதவங்க. எங்க குடும்பத்துல இருந்து வர்ற முதல் தலைமுறைப் பட்டதாரி நான் தான். சாதாரண விவசாயின் மகளான நான் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப்பில் படிக்க செலக்ட் ஆகி அமெரிக்காவுக்கு படிக்கப் போறேன்னு நினைக்கிறப்ப அவ்ளோ சந்தோஷமா இருக்கு” – மகிழ்ச்சியுடன் சொல்லும் ஸ்வேகாவின் வார்த்தைகளில் தன்னம்பிக்கையும் உற்சாகமும் நிரம்பியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகேயுள்ள காசிபாளையம் என்னும் கிராமத்திலுள்ள ஒரு மிடில்கிளாஸ் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஸ்வேகா. அப்பா சாமிநாதன் ஒரு சாதாரண விவசாயி, அம்மா சுகன்யா இல்லத்தரசி, 7-ம் வகுப்பு படிக்கும் தம்பி அச்சுதன் எனச் சிறிய குடும்பம் ஸ்வேகாவுடையது. சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், ஸ்வேகாவினுடைய உழைப்பும் ஆர்வமும் மிகப் பெரியது. அதுதான் இன்றைக்கு அவரை அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணம் செலவில்லாமல் பட்டப்படிப்பு படிக்க கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. ஆம், அமெரிக்காவின் புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் இலவச ஸ்காலர்ஷிப்பில் பட்டப்படிப்பு படிக்க ஸ்வேகா தேர்வாகியிருக்கிறார்.

இதற்கு ஸ்வேகாவுக்கு கை கொடுத்தது அவருடைய ஆர்வமும், தன்னம்பிக்கையும்தான்.

9-வது படிக்கிறப்ப கிளாஸ்ல `ஜெனிட்டிக்ஸ்’ பாடம் சொல்லிக் கொடுத்தது புரியலை. வீட்டுக்கு வந்ததும் யூடியூப்ல அந்த டாபிக் சம்பந்தமா தேட ஆரம்பிச்சேன். அப்போ, அமெரிக்காவுல இருக்கிற எம்.ஐ.டி (MIT – Massachusetts Institute of Technology) யுனிவர்சிட்டியோட லெக்சரர் எரிக் லேண்டர் என்பவர், அவரோட ஸ்டூடன்ட்ஸுக்கு கொடுத்த லெக்சர்ஸைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்கு ஈஸியா புரிய ஆரம்பிச்சது. மார்க்குக்காகப் படிக்கிறதைவிட, அறிவியலை அங்க வித்தியாசமா சொல்லிக் கொடுத்தது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது.

அப்பவே, எதிர்காலத்துல நாம அமெரிக்கா மாதிரியான வெளிநாடுகள்ல போய் படிக்கணும்ங்கிற ஆசை வந்துடுச்சு.

நான் 10-வது படிச்சப்ப,டெக்ஸ்டெரிட்ரி குளோபல்’ என்னும் நிறுவனத்தின் சி.இ.ஓ-வான ஷரத் விவேக் சாகர் எங்க ஸ்கூலுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தாங்க. `நானும் ஒரு ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன் தான். ஸ்காலர்ஷிப்ல அமெரிக்க யுனிவர்சிட்டியில படிச்சிட்டு வந்து தான் இன்னைக்கு இப்படி இருக்கேன்’னு அவரோட ஸ்டோரியை சொன்னப்ப எனக்கு ரொம்ப இன்ஸ்பைரிங்கா இருந்தது.

கிராமப்புறம் மற்றும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்களை உலகளாவிய கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கும் தளமாகச் செயல்பட்டு வந்த ஷரத் சாகர் சாரோட நிறுவனத்தில் தொடர்ந்து தொடர்பில் இருந்து, அவங்ககிட்ட ஐடியா கேட்டுட்டே இருந்தேன். அவங்களோட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்ல தான் சிகாகோ யுனிவர்சிட்டிக்கு அப்ளிக்கேஷன் போட்டேன்.

என்னோட மதிப்பெண் சான்றிதழ்கள், விளையாட்டு மற்றும் அறிவியல் போட்டிகளில் பெற்ற சான்றிதழ்கள், ஆய்வறிக்கைகள் எல்லாத்தையும் அனுப்பினேன். எப்படியான பின்புலத்துல இருந்து நான் வர்றேன், எதுக்காக நான் அந்த யுனிவர்சிட்டியில படிக்கணும்னு ஆசைப்படுறேன்னு எல்லாத்தையும் தெளிவா குறிப்பிட்டிருந்தேன். எல்லாத்தையும் பரிசீலனை செஞ்சிட்டு என்னை ஸ்காலர்ஷிப்ல படிக்க செலக்ட் பண்ணிட்டாங்க. இதன் மூலமாக 4 ஆண்டு படிப்புக்கான கல்விக் கட்டணம், தங்கும் விடுதி , போக்குவரத்து செலவு என 3 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையுடன் இளங்கலை பட்டப்படிப்பு பயில என்னை செலக்ட் பண்ணியிருக்காங்க.

உலக அளவில் சிறந்த பேராசிரியர்கள், சிறந்த ஆய்வகங்கள் போன்றவற்றை நேரடியா பார்க்கப்போறேன், அங்க படிக்கப்போறேன். நிச்சயமா அதையெல்லாம் நான் முழுமையா பயன்படுத்திக்குவேன். அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடணும்ங்கிறது என்னோட ஆசை. அதேமாதிரி நம்முடைய எஜூகேஷன் சிஸ்டம் சம்பந்தமாகவும் ஏதாவது செய்யணும்னு ஆசை. 12-வது முடிச்சிட்டு அடுத்த வருஷம் ஆகஸ்ட்லதான் அமெரிக்கா போறேன்.

ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்தாலும், கடின உழைப்பும் ஆர்வமும் இருந்தால் யாருக்கு வேணும்னாலும் இப்படியான வாய்ப்புகள் நிச்சயமா கிடைக்கும். நீங்க எங்க இருந்து வர்றீங்கன்னு முக்கியமில்லை. எதை நோக்கி பயணிக்கிறீங்கங்கிறதுதான் முக்கியம்” என்றார்.

வாழ்த்துகள் ஸ்வேகா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *