புதுச்சேரி:புதுவையில் இருந்து அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கோரிமேடு அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் இயங்கி வரும் பட்டானூர் மதுவிலக்கு சோதனை சாவடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது டிப்-டாப் உடை அணிந்த 2 பெண்கள் பயணிகளை போல் மது பாட்டில்களை பைகளில் வைத்து இருந்தனர். அவர்களை பஸ்சில் இருந்து கீழே இறக்கி சோதனை செய்தபோது 2 பெண்களும் 86 புல் மது பாட்டில்களை வைத்திருந்தனர். அவர்களுடன் நடத்திய விசாரணையில் திரு வண்ணாமலை மாவட்டம் பவுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வள்ளி (வயது 50), முருகன் மனைவி பூமாதேவி (40), என்பதும் இவர்கள் புதுவையில் இருந்து மது பட்டில்களை திருவண்ணாமலைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் 2 பெண்களையும் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்து லட்சுமியிடம் ஒப்படைத்தார். மது பாட்டில் கடத்திய 2 பெண்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *