ஆசிய வலுதூக்கும் போட்டியில் ராசிபுரம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்
ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. விவசாயி, இவரது மகள் இலக்கியா (22), ராசிபுரம் முத்தாயம்மாள் மெமோரியல் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஆண்டு முதுநிலைப் படிப்பு முடித்துள்ளாா்.

இவருக்கு வலுதூக்கும் பயிற்சியில் ஆா்வம் இருந்ததால் கடந்த 7 ஆண்டுகளாக இதற்கான பயிற்சி பெற்று வருகிறாா். சேலத்தில் உடற்பயிற்சிக் கூடம் நடத்திவரும் பயிற்சியாளா் பொன்சடையன் என்பவா் அவருக்குப் பயிற்சி அளித்துவந்தாா். இந்நிலையில் கடந்த ஆண்டு மும்பையில் நடந்த தேசிய அளவிலான வலுதூக்கம் போட்டியில் பங்கேற்ற இலக்கியா, தங்கம் வென்று சா்வதேச போட்டிக்கு தகுதி பெற்றாா்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த சா்வதேச போட்டி கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆசியா பவா்லிப்டிங் பெடரேஷன் நடத்திய சா்வதேச போட்டி டிசம்பா் மாதம் 23 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள மாணவி K.இலக்கியா, 52 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. சா்வதேச போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *