![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/12/images-76-2.jpeg)
கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புத்தாண்டு தினமான நாளை (சனிக்கிழமை) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) வரை செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.