![](http://vidiyalainokki.com/wp-content/uploads/2021/12/IMG-20211209-WA0001.jpg)
பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார்: 14 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக தனது தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார். காசி விஸ்வநாதர் கோயிலையும், கங்கை நதிக்கரையையும் இணைக்கும் ரூ.339 கோடியில் கட்டப்பட்ட வளாகத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 14 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க இருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாரணாசி நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு, கங்கை நதிக்கரையிலிருந்து செல்லும்போது, குறுகிய தெருக்கள் வழியாகவும், சாலை வழியாகவும் செல்ல வேண்டியதிருந்தது.
இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதையடுத்து, கங்கை நதிக்கரையிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நேரடியாகச் செல்லும்வகையில் கடந்த 2019, மார்ச் 8ம் தேதி ரூ.339 கோடியில் காசி வி்ஸ்வநாதர் வளாகத் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்தின் பணிகள் எவ்வாறு நடக்கின்றன, எப்போது முடியும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவ்வப்போது அதிகாரிகளிடம் தானே கேட்டு தெரிந்து கொண்டு பணிகளை பிரதமர் மோடி கண்காணித்தார். அதுமட்டுமல்லாமல் தி்ட்டங்களில் தேவையான மாற்றங்கள், பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் வசதிகளை அதிகப்படுத்துதல் போன்ற ஆலோசனைகளையும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
இந்தத் திட்டத்துக்காக 300 சிறுகடைகள் கையகப்படுத்தப்பட்டன. 1400 கடைக்காரர்களிடம் சுமூகமாகப் பேசி, இழப்பீடுகளை வழங்கி இடங்களைக் கைப்பற்றி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காசி விஸ்வநாதர் திட்டம்-1ன் மூலம் 23 கட்டடிடங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
இந்தத் திட்டத்தில் யாத்ரி சுவிதா கேந்திரா, சுற்றுலா வசதி மையம், வேத கேந்திரா, முமுக்சு பவன், போக்ஸாலா, அருங்காட்சியகம், புகைப்பட அருங்காட்சியகம், உணவுவிடுதி, உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் இதில் அடங்கும்.
இந்தநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உ.பி., அசாம், அருணாச்சலப்பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களின் முதல்வர்கள், பிஹார், நாகாலாந்து துணை முதல்வர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
காசி விஸ்வநாதர் திட்டம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில் “ டிசம்பர் 13ம் தேதி முக்கியமான நாள். காசியில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திட்டத்தை தொடங்கி வைக்கிறேன். இதன் மூலம் காசியில் ஆன்மீக அலை அதிகரிக்கும். அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் “ பிரதமர் மோடி இன்று நண்பகல் 12 மணிக்கு முதலில் காலபைரவர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார், அதன்பின் ஒரு மணிக்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருகிறார். தரிசனம் செய்து, ஆரத்தி காட்டுகிறார். அதன்பின் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
மாலை 6மணிக்கு பிரதமர் மோடி கங்கை ஆரத்தியில் பங்கேற்கிறார். நாளை(14ம்தேதி) பிற்பகல் 3மணி அளவில் வாரணாசியில் உள்ள மகாமந்திர் சத்குரு சதாபல்தியோ விஹான்கம் யோக சன்ஸ்தானின் 98-வது ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசி விஸ்வநாதர் கோயில் தலைமை அர்ச்சகர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா கூறுகையில் “ வாரணாசி நகரம்முழுவதுமே உற்சாகத்தாலும், மகிழ்ச்சியாலும் நிரம்பியுள்ளது. பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார். ஜோதிர் லிங்கங்களில் மிகவும் முக்கியமானது காசி விஸ்வநாதர் கோயில். அதனால்தான் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
முதலில் கங்கை நதியிலிருந்து 2 ஆயிரம் மீட்டர் அளவில் இருந்த கோயில், தற்போது வளாகம் கட்டிவிட்டதால், 50ஆயிரம் சதுரமீட்டராக பரந்துவிட்டது. இந்த வளாகம் கட்டும்போது 40 சிறு பழமையான கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த கோயில்கள் அனைத்தும் இடிக்கப்படாமல் மீண்டும் பாரம்பரியமுறையில் புனரமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்