ஏசி ரயில் பெட்டிகளில் மீண்டும் கம்பளி, விரிப்புகள்: ரயில்வே அதிரடி

ஏசி ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கம்பளி, விரிப்புகள், தலையணை வழங்கும் சேவைகளை ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்திய ரயில்வே மார்ச் 10 ஆம் தேதி முதல் ஏசி ரயில் பெட்டி பயணிகளுக்கு கம்பளி, விரிப்புகள் மற்றும் தலையணை, திரைச்சீலை வழங்கும் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையைாக, ஏசி ரயில் பெட்டி பயணிகளுக்கு கம்பளி, விரிப்புகள் மற்றும் தலையணை, திரைச்சீலை வழங்கும் சேவைகளுக்கு ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், ஏசி ரயில் பெட்டிகளில் கம்பளி மற்றும் படுக்கை விரிப்புகள், திரைத்துணிகள் வழங்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை ரயில்வே உடனடியாக விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், தற்போது மீண்டும் கம்பளி, விரிப்புகள் மற்றும் தலையணை, திரைச்சீலை வழங்கும் சேவையை தொடங்கியுள்ளதாகவும், கரோனா தொற்றுக்கு முன்பு இருந்ததை போல பயணிகளுக்கு சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் கரோனாவிற்கு முந்தைய முறைப்படி முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளும் இணைக்கப்படும். இதனால் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான பயணிகள் மலிவான பயணச்சீட்டில் பயணம் செய்ய முடியும்.

இந்த வசதிகள் 2020 மார்ச் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *