ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம். அந்த அளவுக்கு இந்த மாதம் முழுவதும் பல விசேஷங்கள் உள்ளன.

தமிழ் மாதங்களின் அடிப்படையில் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்திராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

தட்சிணாயண புண்ணிய காலத்தின் தொடக்கம், பண்டிகைகளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாள், ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும். இந்த ஆண்டு, ஆடி மாதம் 1 ஆம் தேதி, ஜூலை 17 ஆம் தேதி அன்று வருகிறது.

ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன.

ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

ஆடி கிருத்திகை:

ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது என்றாலும், ஆடி மாத கிருத்திகை நட்சித்திரம் மற்றும் அன்று இருக்கும் கிருத்திகை விரதம் மிகச் சிறப்பான நாளாகும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை, சனிக்கிழமை ஜூலை 23 ஆம் தேதி ஆடி மாதம் 7-ம் தேதி வருகிறது. முருகனுக்கு உகந்த தினமான அன்று, விரதமிருந்து முருகனை வழிபட வேண்டும்.

ஆடி வாஸ்து பூஜை: 

ஒவ்வொரு மாதமும், வாஸ்து நாட்கள் என்று சில நாட்கள் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த அடிப்படையில், ஆடி மாதம் 11 ஆம் தேதி, ஜூலை 27 அன்று வாஸ்து பூஜை நாள் வருகிறது. வாஸ்து நாள் எந்த தோஷமும் இல்லாத நாளாக இருக்கும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் ஆடி மாதத்தில் வாஸ்து நாளன்று பூஜை செய்து, வீடு கட்ட தொடங்கினால், தை மாதத்தில், உத்திராயண புண்ணிய காலத்தில் கிரஹபிரவேசம் செய்து முடிப்பது மிகச் சிறப்பாகும். அதுவும் இல்லமால், தடங்கல் இன்றி வீடு கட்டும் வேலைகள் நிகழும்.

ஆடி அமாவாசை:

முன்னோர்கள் வழிபாடு, கர்ம கடன்கள், தர்ப்பணம் என்று முன்னோர்களை வழிபட்டு, தோஷங்களை நீக்கவும், கருமங்கள் தீரவும், நம் மூதாதையரின் ஆசியைப் பெறவும் ஆடி மாதம் அமாவாசை உகந்தது. ஒரு ராசியில் சூரியன் சந்திரன் சேர்ந்து இருக்கும் நாள் அமாவாசையாக வருகிறது. சந்திரனின் வீட்டில், சூரியனும் சந்திரனும் ஒன்று சேரும் நாள் தான் ஆடி அமாவசை. இதனாலேயே இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி 12 ஆம் நாளன்று, ஜூலை 28 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது.

ஆடி தபசு

பார்வதி தேவி ஊசி முனையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் ஆடி பவுர்ணமி அன்று பார்வதி தேவிக்கு உத்திரம் நட்சத்திரத்தில் சங்கர நாராயணராக காட்சி தந்தார். இதனால் ஆடித் தபசு என்ற பெயரில் நெல்லை மாவட்டத்தில் இவ்விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஆடிப் பூரம்:

ஆடி மாதம் 16 ஆம் தேதி, ஆகஸ்ட்1 அன்று, ஆடிப்பூரம் வருகிறது. அம்பாள் உருவெடுத்த தினமாக புராணங்கள் கூறுகின்றன. ஆண்டாள் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது. மக்களை அரக்கர்களிடம் இருந்து ரட்சிப்பதற்காக அம்பாள் அவதரித்த தினம் என்று புராணங்கள் கூறுகின்றன. பல ஊர்களில், அம்மனுக்கு விசேஷமாக பூஜை செய்யப்பட்டு வளைகாப்பு செய்யப்படும்.

ஆடி பதினெட்டு:

ஆடி மாதம் 18-ம் தேதி, ஆகஸ்டு 3 அன்று ஆடி 18 வருகிறது. தமிழகத்தில் நீர்ப்பாசனப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். ஒவ்வொரு ஆண்டும் காவிரி ஆற்றில், நீர் பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். ஆடி பெருக்கை திருவிழா போல ஊரெங்கும் கொண்டாடுவார்கள்.

வரலட்சுமி விரதம்: 

ஆடி மாதம் 20-ம் நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து, விரதமிருந்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்து வழிபாடுவர்கள்.

கருட பஞ்சமி

ஆடி மாத வளர்பிறை திதிகளில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி ஆகஸ்ட் 2ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷம் உள்ளவர்கள் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆடி செவ்வாய்

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்

ஆடி கோபத்ம விரதம்

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கடைப்பிடிக்கப்படுவது, ஆடி கோபத்ம விரதம். இந்த தினத்தில் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதேபோல், ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்வதால், நாகதோஷம் நிவர்த்தியாகும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

ஆடி அறுதி:

மற்ற தமிழ் மாதங்களைப் போல இல்லாமல், ஆடி மாதம் 32 நாட்கள் உள்ளன. ஆடி 32 ஆம் நாள் ஆடி அறுதி என்று கொண்டாடப்படுகிறது. ஆடி அறுதி என்று விவசாயிகள் நாற்று நடுவார்கள். ஆடி மாதம் பிறக்கும் போது விதை விதைப்பதும் முடியும் போது நாற்று நடுவது வழக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *