ஜூன் 12 குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று, உலகெங்கிலும் சுமார் 100 நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆய்வுகளின்படி, உலகளவில் ஒவ்வொரு 10 குழந்தைகளில் ஒருவர் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார். எனினும் இந்த விகிதம் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) கருத்துப்படி, உலகளவில் சுமார் 152 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர், அவர்களில் 72 மில்லியன் பேர் ஆபத்தான நிலையில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

தீம்

குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாடு எண் 182ன் உலகளாவிய ஒப்புதலுக்குப் பிறகு இது முதல் உலக தினமாகும்.

குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த ஆண்டின் கருப்பொருள் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கான 2021 சர்வதேச ஆண்டிற்கான தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.

இந்த ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த உலகளாவிய புதிய புள்ளிவிவரங்களை வெளியிடுவதன் மூலம் ஜூன் 12 முதல் “வீக் ஆப் ஆக்சன்” கடைப்பிடிக்கப்பட உள்ளது.

உலகளாவிய தொழிலாளர் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை 2002ம் ஆண்டில் நிறுவியது.

இதன் மூலம் 5 முதல் 17 வயது வரையிலான பல குழந்தைகளுக்கு தகுந்த கல்வி, மருத்துவ சேவைகள், ஓய்வு நேரம், அடிப்படை சுதந்திரங்களை வழங்குவதை உறுதி செய்ய அமைக்கப்பட்டது.

இந்நாளில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையாக நடைபெறுகிறது.

முக்கியத்துவம்

குழந்தைத் தொழிலாளர் தொடர்பான சர்வதேச பிரச்சினைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்வுகளை உருவாக்குவதற்கும் ஜூன் 12 குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை என்பனவாகும்.

அந்த உரிமைகளை அவர்களிடமிருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் நலன் பேணும் வகையில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக உலகெங்கும் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதை கண்டறிந்தால், 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சிப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.

அவர்களுக்கு சீருடைகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *